பண்ருட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், காரில் எடுத்துச் செல்லப்பட்ட உலோகச் சிலையை புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டியை அடுத்த கண்டரகோட்டையில் அண்ணாகிராமம் ஒன்றியச் செயல் பொறியாளர் தமிமுனிசா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், காரில் இருந்த சுமார் 120 கிலோ எடை கொண்ட லஷ்மி நரசிம்மர் உலோகச் சிலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர், அந்த உலோகச் சிலையை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்தச் சிலை சென்னையில் இருந்து கும்பகோணத்தில் உள்ள சிலை செய்யும் பட்டறைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.