மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 04th April 2019 09:42 AM | Last Updated : 04th April 2019 09:42 AM | அ+அ அ- |

கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மந்தாரக்குப்பத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பட்டீல் தலைமை வகித்தார். நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மங்களநாதன், பண்ருட்டி வட்டாட்சியர் கீதா, தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) அரங்கநாதன், துணை வட்டாட்சியர் தனபதி, வருவாய் ஆய்வாளர்கள் கெளரி (குறிஞ்சிப்பாடி), சேகர் (காடாம்புலியூர்), ராஜலிங்கம் (மருங்கூர்) உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பட்டீல் பேசியதாவது: மண்டல அலுவலர்கள் தாமதமின்றி வந்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சியளிக்க வேண்டும்.
வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெற உள்ளது. எனவே, வாக்குப் பதிவை குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
பின்னர், வாக்குச் சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்த தகவல்களைக் கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.