மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அனைவரும் நடத்தை விதிகளுக்கு உள்பட்டு செயலாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தினார்.
மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு பயிற்சிக் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்தார்.
கடலூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பணிபுரியும் 195 மண்டல அலுவலர்கள் வாக்குப் பதிவு நாள், வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளில் தேர்தல் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், பணிகள் குறித்து ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச் சாவடி அலுவலர்கள், வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களை கையாள்வது, ஆவணங்கள், அடிப்படை வசதிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மண்டல அலுவலர்கள், வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாகவும் இந்தப் பயிற்சி நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது:
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். வாக்குப் பதிவு சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒற்றுமையுடன் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டு செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு மின்னணு திரை மற்றும் வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் நேரடியாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், சார்-ஆட்சியர்கள் கே.எம்.சரயூ (கடலூர்), விசுமகாஜன் (சிதம்பரம்), எம்.எஸ்.பிரசாந்த் (விருத்தாசலம்), ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.சந்தோஷினி சந்திரா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.