பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர்.
பண்ருட்டி, திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே செல்லும் ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக பண்ருட்டி போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ.நாகராஜன், ஆய்வாளர் ப.சண்முகம் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கண்டனர். இறந்தவரின் வலது நெற்றியில் காயமும், வலது முழங்கை உடைந்த நிலையிலும் இருந்தது. பின்னர், உடலை மீட்டு கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் பண்ருட்டி திருவதிகை மணி நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் விஜயகுமார்(21) எனத் தெரியவந்தது. பட்டதாரியான இவர், சிறிய சரக்கு வாகனம் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 20 நாள்களுக்கு முன்னர் குடும்பத்தினருடன் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் மீண்டும் திரும்பவில்லையாம். இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.