தேர்தல் நடத்தை விதிகளின்படி காவலர்கள் செயல்பட வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிவுறுத்தினார்.
கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.18)) நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, காவல் துறையினருக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முகாமும், 195 நடமாடும் கண்காணிப்புக் குழுக்களுக்கு காவலர்களை ஒதுக்கீடு செய்யும் பணியும் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமை வகித்து, காவல் துறையினருக்கு பணி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கினார்.
பின்னர், காவல் துறையினரிடம் அவர் பேசியதாவது: வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
எனவே, வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர் முந்தைய நாள் இரவிலேயே சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் தங்க வேண்டும். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் வாக்குச் சாவடி அலுவலரின் அனுமதியில்லாமல் வாக்குப் பதிவு செய்யும் இடத்துக்குள் நுழையக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளில் காவலர்களின் பணி என்ன என்பதை தெரிந்துகொண்டு அதேற்கேற்ப செயல்பட வேண்டும்.
வாக்குப் பதிவின்போது யாராவது வாக்குப் பதிவு இயந்திரங்களை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திட காவலர்கள் தங்களது பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கண்காணிப்புக் குழுவினருக்கான ஒரு வாகனத்தில் உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள், மாவட்டம் முழுவதும் சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லுதல் மற்றும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் அவற்றை பத்திரமாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவார்கள்.