தமிழக உரிமைகள் மீட்கப்பட வேண்டுமெனில், மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
அதிமுக கூட்டணி சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமி தனது தேர்தல் பரப்புரையை செவ்வாய்க்கிழமை திருப்பாதிரிபுலியூரில் நிறைவு செய்தார்.
அந்த நிறைவுக் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:
வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் அதிமுக கூட்டணி அமைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியதோடு, பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தியவர் பிரதமர் மோடி. அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் ரூ.65 ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும்.
முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு உள்பட பல்வேறு பிரச்னைகளில் தமிழக உரிமைகளை திமுக பறிகொடுத்துவிட்டது. இழந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும். கடலூருக்கு ரயில்வே இருப்புப் பாதை அமைத்தல், தமிழக அரசின் 2023 தொலைநோக்குத் திட்டங்கள் உள்ளிட்டவை நிறைவடையவும், மாநிலம் தொழில் வளர்ச்சி பெறவும் மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும். இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றார் அவர்.
கூட்டத்தில், அதிமுக செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சொரத்தூர் இராஜேந்திரன், சிவசுப்பிரமணியன், அதிமுக நிர்வாகிகள் ஜி.ஜெ.குமார், முருகுமணி, காசிநாதன், வ.கந்தன், சி.கே.சுப்பிரமணியன், பாமக நிர்வாகிகள் பழ.தாமரைக்கண்ணன், சன்.முத்துகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் சுகுமாறன், மு.சக்திகணபதி, இரா.குணா, ஏ.எம்.வெங்கடேசன், தேமுதிக மாவட்ட செயலர் ப.சிவக்கொழுந்து மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். அதிமுக கடலூர் நகர செயலர் ஆர்.குமரன் நன்றி கூறினார்.