மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தொட்டியத்தைச் சேர்ந்தவர் ஜி.சண்முகம் (45). விவசாய கூலித் தொழிலாளி. கடந்த 18-12-2015 அன்று விருத்தாசலம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த 10 வயதுள்ள மாணவி, அந்த வழியாக பைக்கில் சென்ற சண்முகத்திடம் உதவி கோரினார். தன்னை செல்லும் வழியில் இறக்கிவிட வேண்டுமென மாணவி கோரியதை தொடர்ந்து அவரை தனது பைக்கில் சண்முகம் அழைத்துச் சென்றார். ஏ.சித்தூர் அருகே சென்றபோது வண்டியில் பெட் ரோல் தீர்ந்துவிட்டதாகக் கூறி மாணவியை கீழே இறக்கிவிட்டு பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து வேப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் நீதிபதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சண்முகத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து சண்முகம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞர் க.செல்வப்பிரியா கூறினார்.