வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு வாக்குச் சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 20,68, 523 வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்கள் வாக்களிக்க 2,301 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் முக்கியபணியிடமாக வாக்குச் சாவடி அலுவலர்கள் பணியிடம் உள்ளது. இந்த பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களை கணினி மூலமாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வெ.அன்புச்செல்வன், தேர்தல் பொது பார்வையாளர் கணேஷ் பி.பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்றது.
இதில், 2,301 வாக்குச் சாவடிகளுக்கான வாக்குச் சாவடி அலுவலர்களும், கூடுதலாக 460 அலுவலர்களும் தேர்வு செய்யப்பட்டனர். பணியில் இருக்கும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்தப் பணியில் ஈடுபடுவார்கள்.
வாக்குச் சாவடி அலுவலர் பணியே வாக்குச்சாவடியில் முதன்மையான பணியாகும். அவரே அந்த வாக்குச் சாவடியின் தலைவராக இருந்து மற்றவர்களுக்கு பணியை பகிர்ந்தளித்தல், வாக்குப் பதிவு நிலவரங்களை கண்காணித்து அதன் விவரங்களை முறையாக தெரிவித்தல், தேவையான முடிவு எடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.