கடலூரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், பொதுப்பார்வையாளர் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு 1,500 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது.
இதில், மொத்தம் 13,63,650 வாக்காளர்கள் தங்களது வாக்கை வியாழக்கிழமை செலுத்தவுள்ளனர். அன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுற்ற பிறகு, வாக்குப் பதிவுக்கு பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் மூலமாக போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக 6 அறைகளில் தனித் தனியாக பாதுகாக்கப்படுகிறது.
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் உள்ள வாக்குச் சாவடிகள் அடிப்படையில், அதற்காக தனித்தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 ஆம் தேதியன்று எண்ணப்படும். இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் போதுமான வசதிகள் உள்ளனவா என்பதை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், தேர்தல் பொதுப்பார்வையாளர் கணேஷ் பி.பாட்டீல், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ ஆகியோர் உடனிருந்தனர்.