கடலூர்: கடலூர் துறைமுகத்தில் உள்ள தூய.தாவீது மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், போட்டித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு அண்மையில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் கே.ஆர்.சேஷாத்திரி தலைமை வகித்து பேசினார். அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை பா.கோமதி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். சங்க ஆலோசகர் சு.அருணாசலம் சங்கத்தின் வலைதளத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். போட்டித் தேர்வு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்கள் வேல்முருகன், முருகபாண்டியன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து, கடலூர் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சிறந்த மாணவிகளுக்கு சங்கம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. சங்க கெளரவத் தலைவர் செள.பத்மநாபன் திருக்குறள் புத்தகம் வழங்கினார். நிகழ்ச்சியில், சங்கத்தின் துணைத் தலைவர்கள் கே.ராஜு, கா.சுந்தரம், எஸ்.முகமதுமுஸ்தபா, இணைச் செயலர்கள் டி.ஜெயசுந்தரன், ப.புனிதவதி, இரா.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, சங்க பொருளாளர் செல்ல.கந்தசாமி வரவேற்க, செயலர் லட்சுமிநாராயணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை துணைத் தலைவர் த.சண்முகசுந்தரம் தொகுத்து வழங்கினார்.