மங்கலம்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடுதல் மற்றும் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மங்கலம்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் காளமேகம் தலைமை வகித்தார். ஆசிரியர் தேவராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் எம்.முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார்.
மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் ராமானுஜம், கோவிந்தராஜுலு, ஜெயப்பிரகாஷ், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.