கடலூர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதாக 5 பேர் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
கடலூர் முதுநகர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வெவ்வேறு இடங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக பனங்காட்டு காலனியைச் சேர்ந்த அன்பழகன் மகன் கதிர் (என்ற) கதிரவன் (32), குழந்தை காலனியைச் சேர்ந்த சங்கர் மகன் விக்கி (என்ற) அரிதாஸ் (25) ஆகியோரைக் கைது செய்தனர்.
இதேபோல, நெய்வேலி நகரியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, பொது இடங்களில் அவதூறாகப் பேசியதாக வடக்கு மேலூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பொட்டு (என்ற) சதீஷ்குமார் (28), தெய்வசிகாமணி மகன் கமல் (என்ற) கமலக்கண்ணன் (35), கீழ்வடக்குத்து பகுதியைச் சேர்ந்த தாசப்பன் மகன் பாபு (28) ஆகியோரை கைது செய்தனர்.