மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, ஜனநாயக மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் பி.ராஜசேகரன் தலைமையில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் அண்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: விருத்தாசலம் வட்டம், மணவாளநல்லூர் கிராமத்தில் மாட்டு வண்டிக்கான மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரி மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மணல் எடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தக் குவாரி மூடப்பட்டதால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிழைப்புக்கு போதிய மாற்று வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மாடுகளுக்கு தீவனம் உள்ளிட்ட தேவைகளுக்கு தினமும் ரூ.ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனை, கடனாக பெற்றே செலவு செய்து வருவதால் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே, விருத்தாசலம் பகுதியில் மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில்
கோரியுள்ளனர்.