10 சதவீத இட ஒதுக்கீட்டை  ரத்து செய்ய வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை

மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக கடலூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. ஏனெனில், பொருளாதார அளவுகோல் 
மாற்றத்துக்கு உள்பட்டது. இதைக் கொண்டு இட ஒதுக்கீட்டை வழங்கக் கூடாது. இது சமூக நீதிக்கு எதிரானது. 
எனவே, போராடிப் பெற்ற இந்தத் தீர்ப்பையே கடைப்பிடிக்கும் வகையில், உயர் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 46 சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்துவிட்டு, அவற்றை 4 சட்டங்களாக குறைத்து நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பல்வேறு தொழில்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 4,628-ஆக நிர்ணயித்துள்ளதை ஏற்க முடியாது. இந்தச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும்.
புதிய வரைவு கல்விக் கொள்கை ஏழை, எளிய மாணவர்கள் மேல் படிப்புக்குச் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்திவிடும். இந்தக் கல்விக் கொள்கை ஜனநாயக மீறலாக உள்ளது. எனவே, இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, வருகிற 21 -ஆம் தேதி சென்னையில் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com