ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேரமும் இயக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில், விருத்தாசலம் பாலக்கொல்லையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆர்.மாரிமுத்து தலைமை வகித்தார். கிளைச் செயலர்கள் எஸ்.கணேசன், ஜி.வேலன், ஜி.வீரன், கே.மதியழகன், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் வட்டச் செயலர் என்.எஸ்.அசோகன், வட்டக் குழு உறுப்பினர்கள் கே.எம்.குமரகுரு, ஆர்.கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.
விருத்தாசலம் அருகே உள்ள புலியூர், பாலக்கொல்லை ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிக்கு வராத மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலடி பகுதியில் கூழாங்கற்களை கடத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
பாலக்கொல்லை பஞ்சாயத்துக்கு உள்பட்ட கலர்குப்பம் கிராமத்தில் கசிவுநீர் குட்டை மற்றும் பெரிய ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள்கள் வேலையை அனைவருக்கும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும். இருளகுறிச்சி பஞ்சாயத்துக்கு உள்பட்ட நரசிங்கப் பெருமாள் கோயில் - பூண்யாங்குப்பம் இணைப்புச் சாலைப் பணியை முழுமைப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
ஆலடி பகுதியில் 24 மணி நேரமும் விற்பனையாகும் மது விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.