சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொது கருவிகள் கூடம் அமைக்க முன்னாள் மாணவர்கள் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரூ. 4.8 கோடியில் பொது கருவிகள் கூடம் கட்டப்படவுள்ளது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள கருவிகள், கல்வி உபகரணங்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு, அனைத்துத் துறையில் பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், தொழில்சாலை தொடர்பான ஆலோசகர்கள் பயனடைவர்.
இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான முழு தொகையையும் முன்னாள் மாணவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்று கட்டுவதென முன்னாள் மாணவர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் அண்மையில் முடிவெடுக்கப்பட்டு, பண உதவி வேண்டி வலைதளத்தில் கோரிக்கை விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 1990-ஆம் ஆண்டு வேதிப்பொறியியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சார்பாக ரூ. 3,62,000/- க்கான காசோலையை முல்லை, கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசனிடம் புதன்கிழமை வழங்கினர்.
நிகழ்ச்சியின் போது, முன்னாள் மாணவர்கள் மைய இயக்குநர் சரவணன், வேதிப்பொறியியல் துறைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.