சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டாரத்தில் சம்பா பருவத்துக்குத் தேவையான நெல் விதைகள் வண்டுராயன்பட்டு, கீரப்பாளையம் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநர் பிரேமலதா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீண்ட கால மோட்டா ரகமான சி.ஆர். 1009 சப்-1, மத்திய கால சன்ன ரகமான பிபிடீ 5204, டிகேஎம் 13, என்எல்ஆர் 34449 ஆகிய நெல் விதைகள் மானிய விலையில் கிடைக்கும். சி.ஆர். 1009 சப்-1 ரகமானது சம்பா பருவத்துக்கு ஏற்றது. இது 166 நாள்கள் வயதுடையது. இலைப்புள்ளி நோய், பழுப்பு தத்து பூச்சி ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.
டி.கே.எம். 13 ரகமானது சம்பா மற்றும் தாளடிக்கு ஏற்றது. 130 நாள்கள் வயதுடைது. இலை மடக்குப் புழு, தண்டு துளைப்பான், பச்சை தத்து பூச்சி ஆகியவற்றிக்கு மிதப்பான எதிர்ப்புத் திறன் கொண்டது. என்எல்ஆர் 34449 ரகமானது தாளடிக்கு ஏற்றது. 125 நாள்கள் வயதுடையது. குலை நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. மேலும், உலர் மண்ணுக்கும் எதிர்ப்புத் திறன் கொண்டது.
மேற்கண்ட நெல் ரகங்கள் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய முறையில் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுப் பயனடைய வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.