விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நிலக்கடலையில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி, அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.கண்ணன் வரவேற்றார். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதை மைய இயக்குநர் சுந்தரேஸ்வரன் தலைமை வகித்து, தொழில்நுட்பக் கையேடு, செய்தி மடலை வெளியிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
கோவை விதை மைய பேராசிரியர் ச.சுந்தரலிங்கம், திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் வைத்தியநாதன், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மோதிலால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வேளாண்மை துறை உதவிப் பேராசிரியர் க.நடராஜன் நிலக்கடலையில் விதை உற்பத்தி குறித்தும், உதவிப் பேராசிரியர் சு.மருதாசலம் விதை உற்பத்தியில நோய், பூச்சி நிர்வாகம் குறித்தும், திண்டிவனம் விவசாயி ப.சேதுராமன் இனக் கவர்ச்சி பொறி, விளக்குப் பொறி மூலம் பூச்சி மேலாண்மை குறித்தும் தொழில்நுட்ப உரையாற்றினார். அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் க.வேங்கடலட்சுமி, ம.பாலரூபினி ஆகியோர் பயிற்சியை ஒருங்கிணைத்தனர். பயிற்சியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 85-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.