பண்ருட்டி, தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள துர்கா பரமேஸ்வரி என்ற காளியம்மன் கோயில் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் 61-ஆம் ஆண்டு செடல் மற்றும் சாகை வார்த்தல் விழா கடந்த 15-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 16-ஆம் தேதி சக்தி கரகம் ஊர்வலம், சாகை வார்த்தல், திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து நாள்தோறும் விஸ்வரூப தரிசனம், நாக வாகனத்தில் சேஷ சயன காட்சி, பகவத்கீதை மஹோற்சவம், மார்கண்டேயர் ஐதீகம், பால்குடம் ஊர்வலம், மஹிடாசூர சம்ஹார உற்சவம் மற்றும் அம்மன் வீதி உலா ஆகியவை நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணியளவில் கெடிலம் ஆற்றில் இருந்து சக்தி கரகம் ஊர்வலம் தொடங்கி நடைபெற்றது. பகல் 12 மணியளவில் செடல் உற்சவம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் செடல் அணிந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேர் நிலையை அடைந்தது. சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. விழாவில், கோயில் செயல் அலுவலர் ஜெ.சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.