கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோகுலாஷ்டமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண பகவானின் பிறப்பு கோகுலாஷ்டமி விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வீடுகளில் மா கோலமிட்டும், கிருஷ்ணர் பாதம் வரைந்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.
விருத்தாசலம் வட்டம், கோபாலபுரத்தில் உள்ள ஜெயப்பிரியா
வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தாளாளர்
சி.ஆர்.ஜெயசங்கர் தலைமையில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் ரேவதி வரவேற்றார். விழாவில், 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்ணன், ராதை வேடம் தரித்து நடனப் போட்டி, மாறுவேடம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர் அ.முருகன், துணை முதல்வர் ரம்யா, நிர்வாக அலுவலர் புனிதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியை காயத்திரி நன்றி கூறினார். விருத்தாசலம் மணலூரில் உள்ள ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா பள்ளி முதல்வர் சீ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் கண்ணன், ராதை வேடமணிந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாணவர்கள் பங்கேற்ற உரியடி நிகழ்ச்சியும் நடைபெற்றது.