பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் நாச வேலைக்கு திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத் துறை தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, கடலூர் மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகள், மாவட்ட நுழைவாயில் பகுதிகளில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் க்யூ பிரிவு உள்பட பல்வேறு பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதோடு தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ரயில்வே உதவி ஆய்வாளர் சின்னப்பன் தலைமையில் சோதனை நடைபெற்றது. விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளர் சாகுல்அமீது தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கடலோரப் பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்கும் வகையில் கடலோரக் காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு மாவட்டம் முழுவதும் சாலை, கடல் வழித்தடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை ஈடுபட்டனர்.