கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு மாதாந்திர உதவித்தொகை, வங்கி கடன், பசுமை வீடு, வேலைவாய்ப்பு, ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பங்களை அளித்தனர். மேலும். மாற்றுத் திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் மாற்றுத் திறனாளிகள் உரிமை தொடர்பான கோரிக்கை மனுவையும் ஆட்சியரிடம் அளித்தனர். கூட்டத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மாத உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு செயல்படுத்தப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6,400 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) எஸ்.பரிமளம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.