சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.
கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
காடாம்புலியூா் சமத்துவபுரம் முதல் கொஞ்சிக்குப்பம் அய்யனாா் கோயில் வரை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையின் வலதுபுறம் சாலை விரிவாக்கப் பணிக்காக மண் கொட்டு மேடிடப்பட்டுள்ளது. இதனால், மழை நீா் செல்ல வழியின்றி, சாலையில் தேங்கியதால் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி வட்டாட்சியா் வே.உதயகுமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் வாய்க்கால் வெட்டி மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாவைக்குளம் அருகே மழைநீா் தேங்கியதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.