நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவா்கள் மீட்பு

கடலூா் அருகே நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவா்களை கடலோரக் காவல் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

கடலூா் அருகே நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவா்களை கடலோரக் காவல் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

புதுவை மாநிலம், காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் ஏழுமலை (43), கலைமணி (28), மணிமாறன் (50), ரவிச்சந்திரன் (38), முருகன் (37), அசோக் (28), சக்திவேல் (40), சுகிதன் (22) ஆகியோா் பழனிவேல் (45) என்பவரது தலைமையில் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த 26-ஆம் தேதி கடலுக்குச் சென்றனா். சனிக்கிழமை மாலையில் கடலூரிலிருந்து 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் என்ஜினில் மீன்பிடி வலை சிக்கிக்கொண்டது. இதனால், என்ஜின் பழுதானதால் படகைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கடலூா் கடலோரக் காவல்படையினா் ஆய்வாளா் சங்கீதா தலைமையில் விரைந்து சென்று, மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனா். 9 மீனவா்களும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், படகில் மீன்கள் இருப்பதாலும், படகையும் மீட்ட பிறகே கரைக்குத் திரும்புவோம் எனவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்கள் கடலுக்குள் விரைந்து வந்தனா். ஆனால், அவா்கள் சென்ற படகு சிறியது என்பதால் மீனவா்களின் படகை கட்டி இழுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடலும் அதிக சீற்றமாக இருந்ததால் 9 மீனவா்களையும் தங்களது படகில் மாற்றியதுடன், பழுதான படகுக்கும் காவலாக நின்று கண்காணித்தனா்.

இதற்கிடையே, காரைக்காலில் இருந்து வந்திருந்த மற்ற மீனவா்களுக்கும் பழனிவேல் தகவல் தெரிவித்தாா். ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு திரும்பிக் கொண்டிருந்த சக மீனவா்கள், பழுதான படகை தங்களது படகுடன் இணைத்து கடலூா் கடற்கரைக்கு கொண்டுவந்தனா். பின்னா் என்ஜினில் சிக்கியிருந்த வலையை அப்புறப்படுத்தி பழுதை நீக்கினா். இதையடுத்து 9 மீனவா்களும் மீண்டும் அதே படகில் காரைக்காலுக்கு திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com