மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திங்கள்கிழமை சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, கீரப்பாளையம் கடைவீதியில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதையடுத்து, கே.எஸ்.அழகிரி தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் மதச் சார்பற்ற கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். அதனால், அவர் (திமுக) கூட்டணியில் சேர வாய்ப்பில்லை. அரசியலில் அவரது செயல்பாடு பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக உள்ளது.
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், பிரதமர் மோடி விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து ஏதும் அறிவிக்காமல், ரூ.6,000 தருவதாகக் கூறுகிறார் என்றார் கே.எஸ்.அழகிரி.
இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கடலூர் மாவட்டத் தலைவர் பெரியசாமி, செந்தில்குமார், வர்த்தகப் பிரிவுத் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன், சங்கர், சேரன் ராதாகிருஷ்ணன், அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.