கடலூரில் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தீக்குளித்த தாய் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் சுப்பராயலு நகரைச் சேர்ந்தவர் சா.ருக்கையா பீவி (46). இவருக்கு, கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநருடன் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற ருக்கையா பீவி, கடந்த 15 ஆண்டுகளாக தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். சென்னையில் வசிக்கும் சகோதரர்கள் அவருக்கு அவ்வப்போது உதவி செய்து வந்ததாக தெரிகிறது. மூன்று பெண் குழந்தைகளில் ஒருவர் கல்லூரியிலும், 2 பேர் பள்ளியிலும் படித்து வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக கடந்த சில மாதங்களாக கல்லூரி மற்றும் பள்ளி கட்டணங்களை செலுத்த முடியாத சூழ்நிலை ருக்கையா பீவிக்கு ஏற்பட்டதாம்.
கட்டணம் செலுத்த முடியாமல் மகள்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டதால் மனமுடைந்த பீவி, கடந்த 4-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவரது சகோதரர் காஜாமைதீன் (60) திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.