பருவ நிலை மாற்றம் தேசியக் கருத்தரங்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தோட்டக்கலைத் துறையில், "பருவநிலை மாற்றம் மற்றும் நகர்ப்புற சூழலில் தோட்டக்கலையின் பங்கு' எனும் தலைப்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
தேசிய பல்லுயிர் பெருக்கக் கழகம், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, நபார்டு வங்கி ஆகியவற்றின் பங்களிப்போடு நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ரவிச்சந்திரன் தொடக்கி வைத்துப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சிக் கழக இயக்குநர் எம்.ஆர்.தினேஷ் பங்கேற்று, பருவநிலை மாற்ற சூழலில் மனித குலம் எதிர்கொண்டுள்ள சவால்களை தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் சார்ந்து வென்றெடுப்பது குறித்து பேசினார். கருத்தரங்கில் தேசிய அளவிலான பல்வேறு வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வேளாண் கல்லூரிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறப்புரையாற்றினர். மேலும், தேசிய அளவில் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 275 ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
நிறைவு விழாவுக்கு வேளாண்புல முதல்வர் கே.தாணுநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை துறை பேராசிரியர் டி.என்.பாலமோஹன் நிறைவுரையாற்றினார். கிளாடியோலஸ் டிரஸ்ட் தலைவர் மனோஜ் நசீர் வாழ்த்துரை வழங்கினார். தோட்டக்கலைத் துறை தலைவர் ஆறுமுகம் ஷகிலா வரவேற்றார். கருத்தரங்கின் இயக்குநர் எஸ்.ரமேஷ்குமார் அறிக்கையை தொகுத்து வழங்கினார். நிகச்சிக்கான ஏற்பாடுகளை செயலர்கள் சி.டி.சாத்தப்பன், டி.தனசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். நபார்டு வங்கி சார்பில் துணைப் பொது மேலாளர் சினேகல் பன்சோடு, கடலூர் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஹரிஹரபுத்ரன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.