இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதச் சார்பின்மை, ஜனநாயகம், தமிழக உரிமைகள், இயற்கை வளங்கள் பாதுகாப்பு மாநாடு, பேரணி விருத்தாசலத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாநாட்டுக்கு, கட்சியின் மாவட்ட செயலர் த.கோகுலகிறிஸ்டீபன் தலைமை வகித்தார். மாநாட்டில், விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுடன் அரசியல் கூட்டணி கிடையாது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், கட்சியின் அகில இந்திய தலைவர் கே.கங்காதரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தி.வேல்முருகன் பேசியதாவது: தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீத பணியிடங்களை தமிழருக்கே அளிக்க வேண்டும். தமிழக அரசுப் பணியிடங்களை 100 சதவீதம் தமிழருக்கே வழங்க வேண்டும்.
தமிழக மக்களின் விளைநிலம், வீட்டு மனைகளை கையகப்படுத்தி அமைக்கப்படும் பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழருக்கே வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் சட்டம் கொண்டு வரக் கோரியும் வருகிற 28-ஆம் தேதி தவாக சார்பில் சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடைபெறுகிறது என்றார் அவர்.