கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா கடலூர் நகர அரங்கில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்து, 165 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.18.68 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக அவர்கள் அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற முடியும். மற்றவர்களைப் போல மாற்றுத் திறனாளிகள் சிறந்து விளங்கி, சமூகத்தில் சாதனையாளராக விளங்க வேண்டும் என்றார். விழாவில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் அ.லட்சுமி, மாவட்ட கருவூல அலுவலர் கு.ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.ஜோதிமணி, அரசுப் பார்வையற்றோர் பள்ளி தலைமை ஆசிரியை ச.பாஸ்டினா அந்தோணிசெல்வி, அரசு காது கேளாதோர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அ.மரியபாஸ்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வ.சீனிவாசன் வரவேற்க முடநீக்கியல் வல்லுநர் சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.