சிறப்பாக செயல்பட்ட அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு காமராஜர் விருது வழங்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் கு.காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு, பள்ளியில் தூய்மை பராமரிப்பு, பொதுத் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி விகிதம், ஆசிரியர், மாணவர்களின் தனிப்பட்ட வெற்றிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை திறம்பட நடத்தியது உள்ளிட்ட 10 அம்சங்களை கணக்கிட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறும் கல்வி நிலையத்துக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி 2018-19-ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, மேல்நிலைப்பள்ளி அளவில் கட்டியாங்குப்பம் பள்ளியும், உயர்நிலைப் பள்ளி அளவில் திருக்கண்டேஸ்வரம் பள்ளியும், நடுநிலைப் பள்ளிகள் அளவில் நகர் பள்ளியும், தொடக்கப் பள்ளிகள் அளவில் கிள்ளை பள்ளியும் தேர்வாகின.
இந்தப் பள்ளிகளுக்கான விருது, காசோலையை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிசாமி வழங்கினார். இதில், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. இந்த நிதியில் பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
இந்த விருதுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பெற்றுக் கொண்டனர்.