தமிழக ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கடந்த கூட்ட நடவடிக்கையை பொதுச்செயலர் பாபு.சுப்பிரமணியனும், வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் ர.திருநாவுக்கரசும், சங்க இதழுக்கான வரவு-செலவு அறிக்கையை மாநில துணைத் தலைவர் ஆர்.ஜேக்கப் ஆகியோர் வாசித்தனர்.
கூட்டத்தில், 4 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை ஓய்வூதியர் சங்கத் தலைவர்களுக்கு கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்துள்ள ஓய்வூதியர்களுக்கு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு ஜிஎஸ்டி கவுன்சிலை வலியுறுத்த வேண்டும். 21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கிட தமிழக அரசு தனது கொள்கை முடிவை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் எம்.முத்துசாமி, வட்ட நிர்வாகிகள் ஆர்.திருநாராயணன், ஏ.செயராமன், வி.தனராசு, பி.ஆறுமுகம், ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக குறிஞ்சிப்பாடி வட்டத் தலைவர் ஏ.கலியபெருமாள் வரவேற்க, செயற்குழு உறுப்பினர் வி.பூராசாமி நன்றி கூறினார்.