திட்டக்குடி அருகே குடிநீர்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி அருகே அருகேரி ஊராட்சிக்கு உள்பட்ட கீழநெமிலி கிராமத்தில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லையாம். மேலும், கை பம்புகளிலும் தண்ணீர் வருவதில்லை, தெருவிளக்குகள் எரிவதில்லை என கிராம மக்கள் புகார் கூறி வந்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் திரளானோர் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலிக் குடங்களுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். எனினும், துறை சார்ந்த அலுவலர்கள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. தங்களது கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.