பண்ருட்டி ரோட்டரி சங்கம், போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பண்ருட்டி ரோட்டரி சங்கத் தலைவர் டி.சண்முகம் தலைமை வகித்தார். செயலர் எஸ்.அரவிந்தன் முன்னிலை வகித்தார். பொருளாளர் டி.எஸ்.பாலமுருகன் வரவேற்றார். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம்.செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு போக்குவரத்து விதிகள், பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கினார்.
முன்னதாக அவர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தை 100 சதவீதம் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இருக்கை பட்டை அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் இயக்கக் கூடாது என்றார்.
நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் ஆர்.சந்திரசேகர், கோ.காமராஜ், பாண்டு, தேர்வுத் தலைவர் வி.வீரப்பன், தொழிலதிபர் சம்பந்தன், நிர்வாகிகள் ஏழுமலை, அசோக்ராஜ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்துகொண்டனர்.