பேருந்துகளை பாதுகாப்பாக இயக்குவதன் அவசியம் குறித்து ஓட்டுநர்களிடம் மாவட்ட எஸ்பி ப.சரவணன் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், 2019-ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கடலூர் பேருந்து நிலையத்துக்கு எஸ்பி வந்தார். இதையடுத்து அங்கு அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் திரண்டனர். அவர்களுக்கு எஸ்பி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: பயணிகளை ஏற்றிச்செல்லும் மிகவும் பொறுப்பான வேலையில் ஓட்டுநர்கள் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில் பயணிப்போர் ஓட்டுநர்களை நம்பியே பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு எவ்வித விபத்தும் ஏற்படாத வண்ணம் மிகவும் பொறுமையாகவும், மிதமான வேகத்திலும் வாகனத்தை இயக்கி அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பது ஓட்டுநர்களின் முக்கிய கடமை. விபத்தில்லா மாவட்டமாக கடலூர் விளங்கிட ஓட்டுநர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார் எஸ்பி.
அப்போது, திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.