மீன் எண்ணெய் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கடலூர் சிப்காட் அருகே உள்ள செம்மங்குப்பம் கிராம மக்கள் அளித்த மனு: செம்மங்குப்பம் பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் ஆலை தொடங்கப்பட்டது. இந்த ஆலை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளைப் பின்பற்றாமல் கழிவுகளையும், கழிவு நீரையும் பொது இடங்களில் வெளியேற்றியது. இதனால், இந்த தொழிற்சாலை இயங்கக் கூடாதென கடந்த 2016-ஆம் ஆண்டு கடலூர் கோட்டாட்சியரால் உத்தரவிடப்பட்டு மூடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக மீண்டும் ஆலையை இயக்கும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோதும் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து புகார் அளித்த நிலையில், இரவு நேரத்தில் மீன்களைக் கொண்டு வந்து மின் ஜெனரேட்டர் மூலமாக ஆலையை இயக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த ஆலை மீண்டும் இயங்குவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும், துர்நாற்றம் வீசுவதை கட்டுப்படுத்தவில்லை.
இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே, சுற்றுச்சூழலை பாதிக்கும் இதுபோன்ற ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று அந்த மனுவில் தெரிவித்தனர்.