வடலூர், புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் சி.மதியழகன் தலைமை வகித்தார். நெகிழிக்கான மாற்றுப் பொருள் கண்காட்சியை வடலூர் நகர அதிமுக செயலர் சி.எஸ்.பாபு திறந்து வைத்தார்.
நெகிழி விழிப்புணர்வுப் பேரணியை வடலூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வடலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ரா.திருமுருகன், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் மணி, பொருளாளர் ரகோத்தமன், வடலூர் பேரூராட்சிச் செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், வடலூர் நுகர்வோர் பேரவைத் தலைவர் கல்விராயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுநகர் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி, வடலூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
இந்தப் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் நெகிழி ஒழிப்பு தொடர்பான பதாகைகளை கைகளில் ஏந்திவாறு முழக்கமிட்டபடி சென்றனர்.
மேலும், அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் நெகிழியைத் தவிர்க்குமாறு மாணவர்கள் வலியுறுத்தினர்.
பள்ளி வளாகத்தினுள் நெகிழி மாற்றுப் பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதை திரளானோர் பார்வையிட்டனர். பேரணியில் சையது அபுதாகிப், உதயராஜ், ரஜினிமுருகன், பக்தவசலம், வேல்முருகன், நடராஜன், ராமமூர்த்தி, ஏ.சி.பாலு, வடலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் தேவதி, சங்கீதா, பவ்யா, பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மந்தார இலைக்கு மவுசு !
நெகிழிப் பொருள்களுக்கான தடையை அடுத்து, மந்தார இலைக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் கடலூர் மாவட்டச் செயலர் ச.ராஜேந்திரன் கூறியதாவது: உணவுப் பொருள்களைப் பறிமாறுவதிலும், பொட்டலம் கட்டுவதிலும் மந்தார இலையே பயன்பட்டு வந்தது. நெகிழிப் பயன்பாட்டால், அது குறைந்திருந்தது. தற்போது மீண்டும் மந்தார இலையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மந்தார இலையில் பறிமாறப்படும் உணவுப் பொருள்களின் மனம், சுவையில் மாற்றம் ஏற்படாது. பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் இலைகள் கால்நடைகளுக்கு உணவாக மாறிவிடும்.
மேலும், எளிதில் மக்கிவிடும் என்பதால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ மந்தார இலை ரூ. 60-க்கு விற்பனையானது. கடந்த ஒரு வாரமாக ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உணவகம், திண்பண்டம் விற்பனை செய்பவர்கள் அதிக அளவு வாங்கிச் செல்வதால், இதன் விலை மேலும் உயரும் என்றார் அவர்.