பண்ருட்டி அருகே தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் ஜெயப்பிரகாஷ் (22). இவர், கடந்த 3 மாதங்களாக முத்தாண்டிக்குப்பம் ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ இயக்கி வந்தாராம். இவருக்கும், சக ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாம்.
இந்த நிலையில், கடந்த டிச.28-ஆம் தேதி ஆட்டோ நிறுத்தத்தில் இருந்த ஜெயப்பிரகாஷை, முத்தாண்டிக்குப்பம் முழுக்காண்டித் தெருவைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் எழிலரசன் (31), அவரது ஆட்டோ ஓட்டுநர் கிழக்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (21), முழுக்காண்டித் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணியன் (40), பேர்பெரியான்குப்பம் ராஜன் தெருவைச் சேர்ந்த கதிரேசன் (24) மற்றும் சிலர் தாக்கினராம்.
இதில் பலத்த காயமடைந்த ஜெயப்பிரகாஷ் புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக முத்தாண்டிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து எழிலரசன், கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சுப்பிரமணியன், கதிரேசன் ஆகியோரை தேடி வந்தனர். வெள்ளிக்கிழமை காலை சுப்பிரமணியனை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், ஜெயபிரகாஷ் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கொள்ளுக்காரன்குட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தாக்குதலில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது சிலர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி சரவணன் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர். மறியலால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.