பண்ருட்டியில் ஜவுளிக் கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள், தடை செய்யப்பட்ட 300 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு கடந்த 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பண்ருட்டி நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாள்களாக நகரில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி, நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி, வெள்ளிக்கிழமை நகராட்சி ஆணையர் (பொ) ஏ.வெங்கடாசலம், துப்புரவு அலுவலர் டி.சக்திவேல், ஆய்வாளர்கள் திண்ணாயிரமூர்த்தி, கொளஞ்சி, சிவலிங்கம் மற்றும் ஊழியர்கள் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, அந்தக் கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 300 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனர். நெகிழிப் பைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்
என கடை நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.