சிதம்பரத்தில் வீட்டுக் கதவை உடைத்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் வாகீசநகர் 1-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (80). இவர் வியாழக்கிழமை காலை தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் தனது மகனின் வீட்டுக்குச் சென்றார். இந்த நிலையில் சுவாமிநாதனின் வீட்டில் முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்ததைப் பார்த்து அந்தப் பகுதியினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் தனது வீட்டுக்கு நேரில் வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 14 பவுன் நகைகள், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடியது தெரியவந்ததாம். இதுகுறித்து சுவாமிநாதன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். டிஎஸ்பி ஆர்.பாண்டியன் உத்தரவின்பேரில் தனிப் படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக போலீஸார் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.