கடலூரில் உள்ள இந்தியன் வங்கியின் கடலூர் மண்டல பிரதான கிளையில் அன்னிய செலாவணி பிரிவு
தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வங்கியின் மண்டல மேலாளர் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மண்டல துணை மேலாளர் பி.சேகர் முன்னிலை வகித்தார். தொழில் அதிபர்கள் வீரவிஸ்வாமித்ரன், கார்த்திக் குப்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர் . அன்னிய செலாவணி பிரிவானது கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகர்கள், பொதுமக்கள் அன்னிய செலாவணி வர்த்தகத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும். நிகழ் காலாண்டில் சுமார் ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை இந்தப் பிரிவில் வர்த்தகம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பண்ருட்டி, நெய்வேலியில் உள்ள முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்கு இந்த பிரிவு உதவிகரமாக இருக்கும் என்று மண்டல மேலாளர் கூறினார்.
விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி, மண்டல அலுவலக முதன்மை மேலாளர்கள் முத்துகுமரன், பாஸ்கரன், கிளை மேலாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக, கிளை மேலாளர் ஏ.ராஜாராமன் வரவேற்க, நெய்வேலி கிளை உதவிப் பொதுமேலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.