எனதிரிமங்கலத்தில் இயங்கும் மணல் குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாகிராமம் ஒன்றியம், எனதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியை மூடக் கோரி கிராம மக்களும், பல்வேறு கட்சியினரும் இணைந்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணல் குவாரி தொடர்ந்து இயங்கி வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை கிராம மக்கள் சுமார் 30 பேர் மணல் ஏற்றி வந்த லாரிகளை மறிக்க முயன்றனர். இதனால் போலீஸாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸார் தங்களது வாகனத்தில் ஏற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களை கீழே இறக்கிவிட்டனர். சுமார் 2 மணி நேர முற்றுகைப் போராட்டத்துக்குப் பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், மணல் குவாரி விவகாரம் தொடர்பாக எனதிரிமங்கலம் கிராமத்தில் பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வத்துக்கு எதிராக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன. இதனை போலீஸார் அப்புறப்படுத்தினர்.