கடலூர் மாவட்டத்தில் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நிகழ் சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் ஜனவரி மாதத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் அறுவடைப் பணிகள் முடிந்து விடும். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டுமென விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கடலூர் மாவட்டத்தில் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிதம்பரம் வட்டத்தில் நக்கரவந்தன்குடியிலும், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் வெட்சியூர், வானதிராயன்பேட்டையிலும், விருத்தாசலம் வட்டத்தில் வண்ணாங்குடிகாடு, சி.கீரனூர், கோபாலபுரம், கோ.ஆதனூர், சத்தியவாடி, விருத்தாசலம் டான்காப் அலுவலகம் ஆகிய இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், திட்டக்குடி வட்டத்தில் பெண்ணாடம், கிளிமங்கலம், வெண்கரும்பூர், தருமகுடிகாடு கிராமங்களிலும், திருமுட்டம் வட்டத்தில் ஸ்ரீநெடுஞ்சேரி, அம்புஜவல்லிப்பேட்டை, காவனூர், கொடுமனூர், கோ.தொழுதூர், கம்மாபுரம், கோ.ஆதனூர், ஸ்ரீமுஷ்ணம், சோழத்தரம், பாளையங்கோட்டை, வலசக்காடு, நகரப்பாடி ஆகிய இடங்களிலும், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் குறிஞ்சிப்பாடி தெற்கிலும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கடலூர் மண்டல அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.