கடலூர் மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி
தங்களது நிர்வாகிகளை இணையதளம் மூலமாக ஒருங்கிணைத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடண் கலந்துரையாடி வருகிறார்.
அதன்படி, கடலூர் மக்களவை தொகுதிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 10-ஆம் தேதி கடலூரில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியினரை அதிகளவில் பங்கேற்க வைப்பது, நிகழ்ச்சியில் கட்சியினர் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி கடலூர் நகர அரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்களவை தொகுதி அமைப்பாளர் தேவ.சரவணசுந்தரம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டத் தலைவர் தாமரைமணிகண்டன், பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் விஜயரங்கன், மாவட்ட செயலர்கள் பெருமாள், வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொறுப்பாளர் எஸ்.சுகுமாறன், மக்களவை தொகுதி பொறுப்பாளர் தடா பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கூட்டத்தில், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்கலாம் என்றும், கேள்வி-பதில் முறையில் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.