தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில, கடந்த வெள்ளிக்கிழமை 4 மாத ஊதிய நிலுவைத் தொகையை மொத்தமாகப் பெற்றனர்.
பண்ருட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்து வந்த மாணவிகளைக் கொண்டு, 23.8.2018 அன்று அதே பள்ளி வளாகத்தில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி தொடக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் 190 மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியை உள்ளிட்ட 8 ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் பள்ளி ஆசிரியைகள் பல மாதங்களாக ஊதியமின்றி பரிதவித்து வந்தனர். இதேபோல, தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 200 பள்ளிகள் உயர், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படதாகவும், இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான விரைவு ஊதிய ஆணை பள்ளிக் கல்வித் துறையிலிருந்து வராததால், கருவூலத் துறை அதிகாரிகள் ஊதியம் வழங்க மறுப்பதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து தினமணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது. இந்த நிலையில், கல்வித் துறை விரைவு ஊதிய ஆணையை வெளியிட்டது. இதன் தொடர் நடவடிக்கையை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை 4 மாத கால ஊதிய நிலுவையை மொத்தமாக பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியைகள் பெற்றனர்.