பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் நீதி கட்சியினர் சிதம்பரம் காந்தி சிலை அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் (படம்) ஈடுபட்டனர்.
கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு துணைபோகக் கூடாது, சிதம்பரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், சிதம்பரம் நகரில் பொதுப் பணித் துறையால் இடிக்கப்பட்ட 369 வீடுகளின் உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கி, புதிய வீடு கட்டித்தர வேண்டும், நகர சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் பெ.கலியபெருமாள் தலைமை வகித்தார். காசி.இளங்கோவன், வி.கல்யாணராமன், ரா.சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் ரா.காசிநாதன் வரவேற்றார். கட்சியின் நிறுவனத் தலைவர் அ.ச.லோகநாதன் கண்டன உரையாற்றினார். நகர பொருளாளர் பாரதி நன்றி கூறினார்.