சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
வடலூர் அருகே உள்ள ஆபத்தாணபுரத்தைச் சேர்ந்த முருகநாதன் மகன் அரவிந்த் (20). இவரது வீட்டின் வழியாக 9-ஆம் வகுப்பு மாணவி தனது பள்ளிக்கு செல்வது வழக்கமாம். அப்போது, அவரை வழிமறித்த அரவிந்த் அவரை காதலிப்பதாக தொடர்ந்து தொல்லைக்கொடுத்து வந்தார். இந்த நிலையில், சிறுமியை அரவிந்த் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபோல பலமுறை அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதால் அவர் கர்ப்பமுற்றார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் சிறுமியை அரவிந்த் வீட்டில் விட்டுச் சென்றனர். அரவிந்த் குடும்பத்தினர் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்குமாறு வலியுறுத்தினர். ஆனால், சிறுமி மறுப்பு தெரிவித்தார். 2.7.2015 அன்று சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸார் அரவிந்த் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மற்ற 4 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்தார். இதில், அபராதத் தொகையில் ரூ.75 ஆயிரத்தை சிறுமிக்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்குரைஞர் க.செல்லப்பிரியா கூறினார்.