பொது வேலை நிறுத்தத்தால் கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலைபாதுகாப்பை உறுப்படுத்தி, புதிய வேலைவாய்ப்பை உருவாக்குதல், பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனையை கைவிடுதல், குறைந்தபட்ச கூலியாக ரூ.18 ஆயிரம் நிர்ணயித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் 2 நாள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழக அளவில் செயல்பட்டு வரும் பல்வேறு தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்ததோடு, மாநில அளவிலான பிரச்னைகளை களைய மாநில அரசை வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை. 90 சதவீதத்துக்கும் அதிகமான அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. சென்னைச் செல்லும் பேருந்துகள் புதுச்சேரி செல்லாமல் மாற்று வழியில் சென்றன. பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாத நிலையில், மற்ற போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் ஊழியர்கள் பணிக்குச் செல்லாதபோதும் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். அரசுத் துறைகளில் பல்வேறு சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடாததால் பணிகள் வழக்கம்போல நடைபெற்றன. மேலும், கல்வி நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்பட்டன. இதனால் கடலூர் மாவட்டத்தில் அகில இந்திய வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படவில்லை.