மாநில நெடுஞ்சாலைத் துறை மூலமாக கடலூர் நகரப் பகுதி, அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விரிவாக்கப் பணிகளில் ஆக்கிரமிப்புகள் தடையாக இருப்பதால், அவை அகற்றப்பட்டு வருகின்றன.
முன்னதாக, ஆக்கிரமிப்புகளைக் கண்டறியும் பணியில் நெடுஞ்சாலைத் துறை உதவிச் செயற்பொறியாளர் சுரேஷ்கண்ணா தலைமையில் அலுவலர்கள் ஈடுபட்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உதவிக் கோட்டப் பொறியாளர் கந்தசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சாவடி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் திருப்பாதிரிபுலியூரில் லாரன்ஸ் சாலை சந்திப்பு முதல் வண்டிப்பாளையம் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
அம்பேத்கர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது, குடிசைவாசிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம்.
அது கிடைக்கும் வரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாதென வலியுறுத்தினர். இதையடுத்து, அங்கிருந்த குடிசைகள் அப்புறப்படுத்தப்படவில்லை.
தொடர்ந்து, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து நேதாஜி சாலையில் ஆல்பேட்டை வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளதாகவும், பொங்கலுக்குப் பின்னர், திருப்பாதிரிபுலியூரில் 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.