கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.11) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, வருகிற 11- ஆம் தேதி நடைபெறும் முகாமில், 10-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான ஆள்களை தேர்வு செய்ய உள்ளன.
இந்த முகாமில் 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் மற்றும் 27 வயதுக்குள்பட்ட பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
எனவே, கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் தி.பாலமுருகன் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 4,091 பேர் பங்கேற்றனர். இவர்களில் 1,310 பேர் பணி நியமனம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.