மதுவிலக்கு -ஆயத் தீர்வைத் துறை சார்பில், கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்து, பங்கேற்றார்.
மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடலூரில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, பேருந்து நிலையம் அருகே முன்னாள் படைவீரர் மாளிகை பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
பேரணியில் மது அருந்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், அதன் தீமைகளை விளக்கும் வகையில், பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டபடி
சென்றனர்.
நிகழ்வில் வேலாயுதனார் கலைப் பேரவையினர் மது மனிதனுக்கு எமன் என்று விளக்கும் வகையில், எமன் வேடம் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றனர்.
நிகழ்ச்சியில் சார் -ஆட்சியர் (பொ) வீ.வெற்றிவேல், கடலூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) ச.நடராசன், செய்தி -மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கோட்டக் கலால் அலுவலர் ரம்யா, முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிசாமி, கடலூர் வட்டாட்சியர் பா.சத்தியன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர்கள் லதா, வனஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.